யார் அறிவாளி

யார் அறிவாளி 


கூடு கட்டுவதில் தூக்கணாங்குருவிக்கு 

இணையான அறிவார்ந்த பறவை

 வேறொன்றும் இல்லை.

பின்னல் போன்ற அதன் கூடு 

கலையார்வம் கொண்டோரும் 

வியக்கும் வண்ணம் மிகவும் 

நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கும்.

அது மட்டுமல்ல . தன் கூட்டிற்கு வெளிச்சம்

வேண்டும் என்பதற்காக கூட்டின் உள்பக்கம்

முழுவதும் சேற்றை அள்ளிப் பூசி ,

சேறு காய்வதற்கு முன்பாக 

மின்மினி பூச்சிகளைக் கொண்டுவந்து 

சேற்றில் ஒட்டி வைத்துவிடுமாம்.

இதன் மூலம் கூட்டிற்கு நல்ல வெளிச்சம் 

கிடைக்கும்.


இந்தச் சின்ன பறவைக்குள் இத்தனை

அறிவா?

வியப்பாக இருக்கிறதல்லவா!


 தூக்கணாங்குருவியைப் போன்று 

 அனைவருக்கும் அறிவார்ந்த செயல்களில் 

 ஈடுபட வேண்டும் என்று ஆசைதான்.

 ஆனால் நடக்கிற காரியமா என்ன?

 அனைவருக்கும் அறிவின் மீது ஒரு 

 தாகம் உண்டு.


 யாருமே தன்னை அறிவற்றவர் என்று

 ஒத்துக் கொள்வதில்லை.

 யாராவது தப்பித்தவறி முட்டாள்

 என்று சொல்லிவிட்டால் போதும் ,

 கோபம் தலைக்கு ஏறிவிடும் .

என்னை முட்டாள் என்று சொல்லிவிட்டான்...

நான் முட்டாளாம்....

நான் முட்டாளா?

இப்படி கொந்தளித்து விடுவோம்.


ஆனால் விபரம் கெட்டத்தனமாக ஏதாவது 

 செய்துவிட்டு  தத்தக்கு பித்தக்கு  

 என்று விழிப்போம்.

இது என் முட்டாள் தனத்தால்தான்

 நடந்தது என்பதை மட்டும் ஒருபோதும் 

 ஒத்துக்கொள்ள மாட்டோம்.

 நம் கம்ப்யூட்டர் மூளையின் 

கணிப்பு அப்படி.

 

ஆனால் இன்னொரு விசயத்தில் கவனமாக இருப்போம்.நமது அறிவை வளர்த்துக் கொள்ள  

மறைமுகமாகப் படாத பாடுபடுவோம்.

 கண்ட கண்ட புத்தகங்களைப் படிப்போம். 

 ஓடி ...ஓடி  நாளிதழ் ,வார இதழ்  

 என்று ஒன்று விடாமல் வாசிப்போம்.

 பொது அறிவு புத்தகங்கள் அனைத்தையும் 

 தேடித் தேடிப் படிப்போம்.

 நாட்டு நடப்பு , உலக நடப்பு எல்லாம் 

 தெரிந்தவர்கள் ஆகிவிட வேண்டும் 

 என்று ஒரு செய்திச்சானல்கூட விட்டு 

 வைக்க மாட்டோம்.

    

 இதனால் மட்டும் நம்மால் அறிவுடையவர்கள் 

 ஆகிவிட முடியுமா ?

 

 "வேறு என்ன வேண்டும் ?"

 

" கேட்க வேண்டும் போல் தோன்றுமே.

 அதையும் கேட்டுவிடுங்கள். 

  ஏன் விட்டு வைக்கிறீர்கள்?"

  

" கற்றிலனாயினும் கேட்க" என்று

வள்ளுவரே கூறியிருக்கிறாரே ....

கண்ட கண்ட புத்தகங்களைப் படிப்பதால்  

பண்டிதன் ஆகலாம் என்பதுதானே உங்கள் கணக்கு.

 

 நீங்கள் எல்லாம் தெரிந்தவர்கள்தான்.

  மறு பேச்சுக்கு இடமில்லை.

  தெரிந்து கொள்வது வேறு. 

  அறிவுள்ளவர்களாக இருப்பது வேறு.

 எல்லாம் தெரிந்தவர்கள் எல்லாம் 

 அறிவுடையவர்களாக இருப்பதில்லை.

  அறிவுடையவர்கள் எல்லாம் 

  தெரிந்திருக்க வேண்டும் என்று 

  அவசியமும் இல்லை.



  என்ன...ஒரே குழப்பமாக இருக்கிறதா!

இதுதான் உண்மை.

    

 அப்படியானால் கற்றல் ஒருவனை 

 அறிவுடையவனாக மாற்றாதா? என்று அடுத்தக் கேள்வியை முன் வைப்பீர்கள்.


உங்கள் கேள்வி நியாயமானது தான்.

 கற்றல் எல்லாவற்றையும் தெரிந்து

 கொள்ள உதவும் .ஆனால் 

 அதுவே அறிவு ஆகாது.

 

  அப்படியானால் அறிவாளியாய் 

  இருப்பதற்கு என்னதான் வழி?

        

   இந்தக் கதையைக் கேளுங்கள்

    புரிந்தால் நீங்கள் அறிவாளி.

   

  ஓர் ஊரில்  முத்து ,மணி என்று

இரு நண்பர்கள் இருந்தார்கள்.இருவரும்

 தங்களுக்குள்  யார் அறிவாளி என்பதைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.


விவாதம் சண்டையில் முடிந்தது. சண்டை கடைசியில் கைகலப்பில் போய்

முடிந்தது.

இருவரையும்   அக்கம்பக்கத்தினர் விலக்கிவிட்டனர்.

இப்போது வழக்கு ஊர் பெரியவரிடம் கொண்டு

 செல்லப்பட்டது.

பெரியவர் எதனால் சண்டை என்று

விசாரித்தார்.


அறிவாளி யார் என்ற விவாதத்தில்

தொடங்கிய சண்டை.பேசிக் கொண்டிருக்கும்போதே முத்து

அடித்து விட்டான் என்றான் மணி.

   

"சரி... இப்போது நான் கேட்கிறேன் உங்களில் யார் அறிவாளி?" என்று கேட்டார் பெரியவர்.

இருவரும் மறுபடியும் நான்தான்

அறிவாளி  நான்தான் அறிவாளி என்று

முட்டை ஆரம்பித்தனர்.

அட...போங்கப்பா.

உங்கள் சண்டையப் பிறகு வைத்துக் கொள்ளலாம். இப்போது

இருவரும் பக்கத்திலுள்ள ஆற்றிலிருந்து இரண்டு குடங்களில் தண்ணீர்

நிரப்பி எடுத்து வாருங்கள் "என்று கூறினார் பெரியவர்.


இருவரும் இரண்டு வெற்றுக் குடங்களை

எடுத்துக்கொண்டு

ஆற்றை நோக்கிப் புறப்பட்டனர்.   

  

 சற்று நேரத்தில் 

 தண்ணீர் குடங்களோடு 

  இருவரும் திரும்பி வந்தனர்.

  

  ஊர் முழுவதும்  பெரியவர் என்ன தீர்ப்பு

  வழங்கப் போகிறார் என்பதை அறிவதற்காக

  கூடி நின்று வேடிக்கை பார்த்துக் 

  கொண்டிருந்தது.

  

  "  உங்கள் தண்ணீர் குடங்களை 

  இங்கே கொண்டு வையுங்கள் "என்றார்    பெரியவர்.

  இருவரும் குடங்களைப் பெரியவர் 

  முன் கொண்டு வந்து வைத்தனர்.

  

 முத்து குடத்தில் 

 தண்ணீர் முழுவதும் நிறைந்திருந்தது.

 

"நீங்கள் சொன்ன மாதிரி அப்படியே

குடத்தில் தண்ணீர் நிரப்பி எடுத்து

வந்துவிட்டேன்.

ஒரு சொட்டு தண்ணீர்கூட குறையாமல்

 அப்படியே கொண்டு வந்து 

விட்டேன் "

 என்றான் பெருமையாக.

 

ஆனால் மணி குடத்தில் 

ஒரு சொட்டு தண்ணீர்கூட  இல்லை.

வெறும் குடமாக கொண்டு வந்து வைத்தான்.


பெரியவர்  தண்ணீர் எங்கே என்பதுபோல முத்துவை மேலும்

கீழும் பார்த்தார்.


"ஐயா...என்னை மன்னித்துவிடுங்கள்.

நானும் ஆற்றிலிருந்து குடம் நிறைய

தண்ணீர் மொண்டு கொண்டு தான் வந்தேன்.

 நான் வரும் வழியில் ஒரு

 கன்றுகுட்டி நீருக்காக வரப்போரம்

கிடந்த சிறிது தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருந்தது.பார்க்கப் பரிதாபமாக

இருந்தது.

 கொஞ்சம் தண்ணீர்  குடித்துவிட்டுப்

போகட்டுமே என்று அதற்கு ஒரு பாத்திரத்தில் 

சிறிது தண்ணீர் ஊற்றி வைத்தேன்.

 

சற்று தொலைவில் செடிகள் வாடி

கிடப்பதைப் பார்த்தேன். 

அதைப் பார்த்துவிட்டு என்னால்  

சும்மா வர முடியவில்லை.

அதற்கும் சிறிது நீர் ஊற்றிவிட்டேன்.

 

 அப்போது சில காகங்கள்

 ஊர்க் கிணற்றங்கரையில் கிடந்த

 கொஞ்சம் நீரை உறிஞ்சி 

குடிக்க முடியாமல்

 திணறிக் கொண்டிருப்பதைப்

 பார்த்தேன்.

 அதனால் மிச்சம் இருந்த நீரைப் பறவைகள்

 குடிக்கட்டுமே என்று கிணற்றடியில்

 ஊற்றிவிட்டு வந்துவிட்டேன்.

 இப்போது என்னிடம் வெற்றுக் குடம்தான்

 உள்ளது" என்றான்.

 

"நீதான் அறிவாளி" என்றார் பெரியவர்.

என்ன வெற்றுக்குடம்  கொண்டு வந்தவன் அறிவாளியா? என்று முறைத்தான்

முத்து.


'எப்படி' என்பது போல எல்லோரும் 

பெரியவரைப் பார்த்தனர்.

 

"எவனொருவன் பிற உயிர்கள் 

படும் துன்பத்தை தன் துன்பமாக 

நினைத்து அதனைக் களைய 

முற்படுகிறானோ அவன்தான் அறிவுடையவன்.

 இந்த தம்பிக்கு தன் கண் முன்னர் எந்த உயிரும் 

 வருந்தி நிற்பதைப் பார்க்க முடியவில்லை.

அறிவுடையவனாக இருக்க விரும்புகிறவன் 

வாடிய பயிர்களைக் கண்டபோது 

 எல்லாம் வாடிய வள்ளலாரைப் போல

 செடி கொடிகள் வாடுவதைக் கண்டதும்  

 தண்ணீர் ஊற்றுபவனாக இருக்க வேண்டும்.

தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் கொடுப்பவனாக இருக்க வேண்டும்.


 கீழே விழுந்து கிடக்கும் 

மனிதனுக்கு ஓடிச் சென்று 

உதவுபவனாக  இருக்க வேண்டும். துன்பத்தால் துடிக்கும் உயிர்களைப் பார்த்த மாத்திரத்தில் அவன் உள்ளம் துடிக்க 

வேண்டும்.


மொத்தத்தில் 

 உயிர்கள் மீதும் அன்பு செலுத்தத் 

தெரிந்தவனாக இருக்க வேண்டும்.

 அவன்தான் அறிவுடையவன்" என்றார்.


இதுதான் பெரியவரின் தீர்ப்பு.

தம்மைச்  சுற்றியுள்ள 

உயிர்கள் மீது அன்பு  செலுத்தும் 

ஒருவனால் மட்டுமே மகிழ்ச்சியான 

சூழலை உருவாக்க முடியும்.

 தான் மட்டுமல்ல... தம்மைச் சுற்றி 

 இருப்பவற்றையும் மகிழ்ச்சியாக 

 வைத்துக் கொள்ளுதல் தானே அறிவுடைமை.

 

 கற்கிறோம்  எதற்காக?

எல்லாவற்றையும் தெரிந்து

கொள்வதற்காக என்பீர்கள்.

தெரிந்து கொள்ளுதல் என்பது வேறு.அறிவைப் பெறுதல் என்பது வேறு

கற்றல் மூலமாகத் தெரிந்தவற்றை  அறிவார்ந்த வழியில்

 பயன்படுத்துகிறவன்தான் அறிவாளி

 என்ற இலக்கணத்திற்குள் வருகிறான். 

 

  கற்போம்.எல்லாவற்றையும் 

  தெரிந்து கொள்வோம்.

  கற்றவற்றை அறிவார்ந்த 

  வழிகளில் பயன்படுத்துவோம்.

  உயிர்கள்மீது காதல் கொள்வோம்.


இப்போது யார் அறிவாளி என்பது

புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

  

 நீங்களும்   அறிவுடையவர்களாக 

 இருக்க வேண்டும் என்று மனக்கணக்கு 

 போட்டு விட்டீர்களல்லவா?

அப்படியானால் அறியாமையோடு

 கொள்ளுங்கள் பிணக்கு.    

 அறிவுடைமையோடு   தொடங்கட்டும் 

 உங்கள் வெற்றி கணக்கு.

     

    

        



Comments

Popular Posts